500 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்த்துகீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து வியந்து போனார்கள்! பித்துப் பிடிக்காத குறைதான்! அதனால் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் சோதனைகளை மேற்கொண்டார்கள். அல்போன்சா, மல்கோவா என, நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடும் மாம்பழங்களெல்லாம் போர்த்துகீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவைதாம்! உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!
இந்தியர்கள், மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை, கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும்!
ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம். கோடையின் உச்சத்தில் மாம்பழப் பருவம் தொடங்கும். கோடை வெயிலின் கடுமை கூடக் கூட, மாம்பழத்தின் இனிப்பும் கூடும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், மொத்தம் 1000 வகைகள் உள்ளன!
பந்து போல உருண்டையாக, நீள் உருண்டையாக, முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையில் எனப், பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள், மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு நிறத்தில் கண்ணைக் கவரும்! முற்றிலும் மஞ்சள், இலைப் பச்சை நிறங்களில், மட்டையாட்டப் பந்து அளவிலிருந்து, நீர்ப்பூசணி அளவு வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.
இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம்! அசாம் காடுகளிலும் மியான்மர் நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான், முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மாம்பழத்தில், ஏ, சி, டி ஆகிய உயிரூட்டங்கள் (வைட்டமின்கள்) மிகுந்திருக்கின்றன. மண்ணெனும் அன்னையின் அன்புக் கொடை எனவும் மாம்பழத்தைப் புகழ்கிறார்கள்! கௌதம புத்தர், வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் எனவும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள், அம்மரத்தை வழிபட்டார்கள் எனவும் கதைகள் உள்ளன.
எல்லோருடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாம்பழம், உண்மையிலேயே ‘பழங்களின் அரசன்’தான்!
No comments:
Post a Comment